தலைக்கவசம் கட்டாயம் நடைமுறைக்கு வந்தது: புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் சோதனை
புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று நடைமுறைக்கு வந்தது.
புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று நடைமுறைக்கு வந்தது. போக்குவரத்து போலீஸார் முக்கிய சந்திப்புகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 13 லட்சமாகும். ஆனால் வாகனங்கள் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்களாகும். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 200 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதில் தலைக்கவசம் இல்லாமல் உயிரிழக்கும் வாகன ஓட்டிகளே அதிகம் என்பதால், புதுச்சேரி மாநிலத்தில் (மே-1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
Advertisement
தலைக்கவசம் அணிவதை கடைப்பிடிக்காத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தவறுக்கும் ரூ. 100, ரூ. 300 அபராதம்விதிக்கப்படும் மூன்றாவது முறையும் அணியாவிட்டால் இறுதியில் உரிமம் ரத்து செய்யப்படும் என பராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசன் அறிவித்தார்.
இதையடுத்து புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
பல்வேறு கடைகள், சாலையோரக் கடைகளில் தலைக்கவசம் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. தரம் குறைந்த தலைக்கவசங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன என மக்கள் புகார் கூறியுள்ளனர்.
போலீஸார் அதிரடி சோதனை
இந்நிலையில் போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் ராஜிவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, கோரிமேடு, மூலக்குளம், மரப்பாலம் உள்பட பல்வேறு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தலைக்கவசம் இல்லாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு முதல் முறை என்பதால் ரூ.100 அபராதம் வாதிக்கப்பட்டது. ஆண், பெண் என பாகுபாடின்றி அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்கவே கட்டாய தலைக்கவசம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள், முதியோர் யாருக்கும் எந்த விதிவிலக்கும் கிடையாது. முதலிரண்டு முறை அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றார்.