முகப்பு
தமிழ்நாடு

'காளி' திரைப்படத்தை வெளியிட தடை

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 10:37 AM
பகிர்:

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
இதுதொடர்பாக, பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளரான வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'அண்ணாதுரை' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றேன். 
அந்தப் படத்தை முன்கூட்டியே எனக்கு திரையிட்டுக் காட்டவில்லை. அண்ணாதுரை படம் சரியாக ஒடாததால் எனக்கு ரூ.4.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய காளி திரைப்படத்தின் உரிமையை எனக்குத் தருவதாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமாவும் தெரிவித்தனர்.
இதற்காக ரூ.50 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்தேன். தற்போது திரை உலகில் நடந்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை திரையிடத் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில், காளி படத்துக்காக என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, அண்ணாதுரை திரைப்படத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்து விட்டு காளி படத்தை திரையிட உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'புதன்கிழமை வரை (ஏப்.11) காளி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதற்குள் எதிர்மனுதாரர்கள் ரூ.4.73 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் தடை நீக்கப்படும்; செலுத்தத் தவறும்பட்சத்தில் தடை தொடரும்' என உத்தரவிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.