சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தவிடாமல் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தவிடாமல் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தவிடாமல் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம். காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் வரை தமிழகத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தவிட மாட்டோம்.
2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறாமல் இருந்தது. இப்போது காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதிப்பாக உள்ள நிலையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு மத்திய அரசின் மூலம் தடை விதித்தார். அதே போன்று தற்போதைய தமிழக அரசும் தைரியமாகச் செயல்பட வேண்டும். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று கூறிய பிறகும், போட்டியை நடத்துவோம் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறவது ஆணவமாக உள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். வீரர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. எங்கள் கட்சியைச் சேர்ந்த பலர் கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்கு டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்களை உளவுத் துறையினரால் கண்டுபிடிக்க முடியாது. போட்டி நடைபெறும்போது எப்படியும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றார்.
கருப்பு பலூன்: பின்னர், சேப்பாக்கம் மைதானம் அருகில் சென்று, கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வேல்முருகன் கருப்புப் பலூன்களைப் பறக்கவிட்டார்.