ரயில் கொள்ளை வழக்கு: சிபிசிஐடி மீண்டும் விசாரணை
சேலம் ரயிலில் செல்லாத நோட்டுகள் கொள்ளைபோன வழக்குத் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேலம் ரயிலில் செல்லாத நோட்டுகள் கொள்ளைபோன வழக்குத் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016 ஆகஸ்டில் சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் துளையிட்டு ரூ. 5.75 கோடி செல்லாத நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளையில் துப்புத்துலக்க அமைக்கப்பட்ட சிபிசிஐடி தனிப்படை போலீஸார் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, ஈரோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை செய்தனர். பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் முதல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வரை விசாரணை மேற்கொண்டனர். ஆனால், கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் திங்கள்கிழமை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி பிரிவு அலுவலகத்துக்குச் சென்று ரயில் கொள்ளை வழக்கு குறித்து கேட்டறிந்து வழக்கு விசாரணையை முடுக்கி விட்டார்.
மேலும், ரயில் நிலையம் சென்று ஓய்வு அறையில் கோவை மற்றும் சேலம் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை செய்தார். முதல்கட்டமாக 10 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், மேலும் சில நாள்கள் இந்த விசாரணை நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.