விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை உத்தரவிட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, காவல்துறையால் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் பலமணி நேரமாக உட்புறமாக பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்தனர்
இவ்விவகாரத்தில் உயர்மட்ட விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை. அவரை கருவியாக பயன்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத் தலைவர் சதாசிவம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில், உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.