ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு உதவிப் பேராசிரியை அழைத்துச் சென்ற விவகாரத்தில் பல மோசமான செய்திகள் வருகின்றன. இதனால், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவது போன்று ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் பொறுப்புக்கு பன்வாரிலால் புரோஹித் தகுதியில்லாதவர். அதனால், அவரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பதவி விலகும் வரையிலோ அல்லது அவரை பதவியில் இருந்து நீக்கும் வரையிலோ திமுக சார்பில் போராட்டம் தொடரும்.
மனிதச் சங்கிலி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்.23-இல் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மே 3- ஆம் விசாரணைக்கு வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
ஆனால், முதல்வரிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இதற்கு முதல்வர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர் நேரம் அளித்தால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.