வஉசி துறைமுகத்துக்கு ரூ. 622 கோடி வருவாய்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 622.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 622.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த 2017 -18 நிதியாண்டில் 365.83 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2016 -17 நிதியாண்டில் கையாளப்பட்ட 384.63 லட்சம் டன் சரக்குகளைவிட தற்போது 4.89 சதவீதம் குறைவாகவே சரக்கு கையாளப்பட்டுள்ளது. இறக்குமதியை பொருத்தவரையில் 261.71 லட்சம் டன்களும், ஏற்றுமதியை பொருத்தவரையில் 104.12 லட்சம் டன்களும் கையாளப்பட்டுள்ளது.
மேலும், 2017-18 நிதியாண்டில் 6.97 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையானது, கடந்த நிதியாண்டில் கையாண்ட 6.42 லட்சம் சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில் 8.65 சதவீதம் கூடுதலாகும்.
கப்பல்கள் தளத்துக்காக காத்திருக்கும் சராசரி நேரமானது, 2017 -18 நிதியாண்டில் 1.27 நாள்களாக குறைந்துள்ளது. கப்பல் காத்திருக்கும் இடத்தில் இருந்து தளத்துக்கு வந்து சரக்கு கையாண்டு வெளியே செல்லும் வரை உள்ள சராசரி கால அளவு 2017-18 நிதியாண்டில் 2.69 நாள்களாக குறைந்துள்ளது.
2017-18 நிதியாண்டில் துறைமுகத்தின் இயக்க வருவாய் ரூ. 622.75 கோடி ஆகும். அதற்கு முந்தைய நிதியாண்டின் இயக்க வருவாய் ரூ. 597.93 கோடி ஆகும். 2017-18 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ. 372.56 கோடி ஆகும். அதற்கு முந்தைய நிதியாண்டில் இயக்க உபரி வருவாய் ரூ. 350.02 கோடி என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.