முகப்பு
தமிழ்நாடு

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: தமிழக மாணவர் 21-ஆவது ரேங்க்

என்.ஐ.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

என்.ஐ.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சுராஜ் கிருஷ்ணா என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று அசத்தியுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) இணையதளத்தில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல் நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத் தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது. 112 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,621 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாண வ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. 
இதில் விஜயவாடாவைச் சேர்ந்த சுராஜ் கிருஷ்ணா என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பிடித்துள்ளார். இவர் 360 மதிப்பெண்களுக்கு 350 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரைப்போல ஆந்திரத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார், ராஜஸ்தானைச் சேர்ந்த பரத் லடுரியா, ஹரியானாவைச் சேர்ந்த பிரனவ் கோயல், தெலங்கானாவைச் சேர்ந்த கட்டு மைத்ரேயா, ராஜஸ்தானைச் சேர்ந்த பவன் கோயல் ஆகியோரும் 360-க்கு 350 மதிப்பெண்கள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
தமிழக மாணவர் 21-ஆவது ரேங்க்: தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமலிங்கம் என்ற மாணவர் 360-க்கு 335 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 21-ஆவது ரேங்க் பெற்றுள்ளார். 
முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
முதன்மைத் தேர்வுக்கு 2.31 லட்சம் பேர் தகுதி: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20-இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். இந்த முதன்மைத் தேர்வுக்கு, முதல்நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,80,331 மாணவர்கள், 50,693 மாணவிகள் உள்பட மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 24 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →