பார்க்கின்சன்ஸ்: 56 வயது நபருக்கு நவீன சிகிச்சை
உடல் இயக்கக் குறைபாடான பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 56 வயது நபருக்கு நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
உடல் இயக்கக் குறைபாடான பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 56 வயது நபருக்கு நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
56 வயதான நடராஜன் என்பவருக்கு பல ஆண்டுகளாக பார்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பு இருந்தது. ஆரம்ப காலத்தில் மருந்துகள் மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவருக்கு, நாள்கள் செல்லச் செல்ல அவரது உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது மூளை சார்ந்த பாதிப்பு என்பதால் உடல் இயக்கம் குறைந்து, கை கால்களில் நடுக்கம், மூட்டுகள் மிருவாக இல்லாமலும் இருந்தது. இதனையடுத்து அவர் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனையின் நரம்பியல் துறைத் துறைத் தலைவர் டாக்டர் சங்கர் கூறியது:
இந்தப் பிரச்னைக்கு ஆள்மூளை தூண்டல் என்ற நவீன முறை மூலம் சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு சிறிய மின் கருவிகளை மூளைக்குள் பதிப்பதன் மூலம், நோயின் தன்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த நோயாளிக்கு மூளையின் எந்த இடத்தில் மின்கருவிகள் பொருத்த வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டு, மண்டை ஓட்டுப் பகுதியில் சிறிய துளையிடப்படடு அதன் மூலம் மூளையின் இரண்டு பகுதிகளில் மின் கருவிகள் பொருத்தப்பட்டன. நோயாளி விழிப்புடன் இருந்த நிலையிலேயே 6 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
மூளையில் பொருத்தப்பட்ட சிறிய மின் கருவிகள் இயங்குவதற்கு நெஞ்சுப் பகுதியில் ஒரு பேட்டரி பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு நோயாளிக்கு உடல் நடுக்கம், மூட்டுகள் மிருதுவாகி, உடல் அசைவுகள் மேம்பட்டுள்ளன. மேலும் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்பட்ட மருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன; அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று தெரிவித்தார்.