மே தினம்: அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 107 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
சென்னை: மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டும், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.