சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒரு முறை நீங்கள் நாத்திகனா? அல்லது ஆத்திகனா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழில் திருவிளையாடல் புரியும் கருணாநிதிக்கு இந்த கேள்வி அல்வா சாப்பிடுவது போல. அவர் அளித்த பதில் இதோ.. "நாநாத்திகன்" என்று பதில் அளித்தார்.
தமிழில் இதனை அழகாகப் பிரித்தால் நான் நாத்திகன் என்று சொல்லலாம். இதையே கொஞ்சம் வேறு மாதிரி பிரித்தால் நான் ஆத்திகன் என்ற பொருளும் கிடைக்கும். இப்படி கேள்விக் கேட்டு மடக்கியவரை, பதில் சொல்லி குழப்பியவர் கருணாநிதி.
வழிபாட்டில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தனது தாய் தமிழை அவர் வழிபட மறக்கவில்லை. தமிழ் மொழியும் அவரை கைவிட்டதில்லை.
கலைஞர் கருணாநிதி நாத்திகனாக இருந்தாலும், அவரது மனைவி மற்றும் மருமகளின் இறை நம்பிக்கையில் அவர் என்றுமே தலையிட்டது இல்லை. அவர்களது நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன் என்றே தெள்ளத் தெளிவாகக் கூறியவர்.