கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை ராணுவ உதவியுடன் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1850இல் கட்டப்பட்டு, 1928இல் ஆங்கிலேயர்களால் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட பழைமையான பாலம் கொள்ளிடம் பழைய பாலம். இந்த பாலத்தில் மொத்தம் 23 தூண்கள் உள்ளன. இதன் மேல் இரும்பு கேரிடர்கள் வைத்து சாலை அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதிகரித்த வாகனப் பெருக்கத்தின் காரணமாகவும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் 8 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதுதடை செய்யப்பட்டது. மேலும், 2016இல் இந்த பாலத்துக்கு மாற்றாக அருகிலேயே ரூ.76 கோடி மதிப்பில் புதிய பாலம் திறக்கப்பட்டது. இதனால், பழைய பாலத்தில் இலகுரக வாகனங்கள், இருச்சகர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.
இந்நிலையில் செக்போஸ்ட் அருகில் இருந்து பழையபாலத்தின் 6-ஆவது தூணில் திடீரென புதன்கிழமை சிறிய விரிசல் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸார் விரைந்து வந்தனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர்.
இதையடுத்து வியாழக்கிழமை தூணில் ஏற்பட்ட விரிசல் மேலும் அதிகரித்து தூண் இரு பகுதிகளாக இரண்டாக பிளந்தது. பிளவு வழியாகவும் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பிளவு காரணமாக இரும்பு கேரிடர்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், 6ஆவது தூணுக்கு மேலே உள்ள சாலைப் பகுதியிலும் விரிசல் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,
கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது! மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.