பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. இன்று திங்கள்கிழமை (டிச.10) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.92க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் வேகமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் மீதான வரியில் ரூ.2.50ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், பாஜக ஆளும் சில மாநிலங்களும் தாங்கள் விதிக்கும் வரியில் ரூ.2.50ஐ குறைத்தன. இதனால் அக்டோபர் 5 ஆம் தேதி பெட்ரோல்-டீசல் விலை சிறிது குறைந்தது.
இதேபோல், சர்வதேச சந்தையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையத் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கின.
இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து இன்று திங்கள்கிழமை லிட்டர் ரூ.72.92க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 29 காசுகள் குறைந்து, ரூ.68.41க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது.