திமுகவில் இணைந்து வரலாறு படைத்த ஓபிஎஸ்!
முதல்முறையாக மூன்று முறை முதல்வர் ஒருவர் வேறு கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வரலாறு படைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மூன்றுமுறை முதல்வராக பதவி வகித்த ஒருவர், வேறொரு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1973 ஆம் ஆண்டு இணைந்த ஓ. பன்னீர்செல்வம், கிளைச் செயலாளர் முதல் இருந்து ஒருங்கிணைப்பாளர் வரை பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியான ஓபிஎஸ், மூன்று முறை முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும், அவை முன்னவராகவும் பதவி வகித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டமும் ஓபிஎஸ்ஸுக்கு பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஓபிஎஸ் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.