திமுக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று(பிப். 21) முதல்வர் மு.க. ஸ்டாலினை பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
பின்னர் பேரவைக் கூட்டம் முடிந்ததும், தனி அறையில் முதல்வர் ஸ்டாலினை சுமார் 10 நிமிஷங்கள் சந்தித்துப் பேசினார். அப்போது மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”ஐந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இன்றைய அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருப்பதைக் காட்டுகிறது” என்றார்.
அதற்கு முன்னதாக, ஓபிஎஸ் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினரான உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பி. அய்யப்பன், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசினார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ, ”முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியிருப்பதும், அவர் மகனுடன் சந்திப்பு நடத்தியிருப்பதும் அவர் கூட்டணிக்கு வருவதற்கான சமிக்ஞையையே (Signal) காட்டுகிறது.
அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, ஆழ்ந்து யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார்" என்று அவர் குறிப்பிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது” என்று இன்று தெரிவித்தார்.
இதன் மூலம் ஓபிஎஸ் விரைவில் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.