புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் (74), புதுச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்தார். உடல்நிலை குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரி லாசுப்பேட்டையில் வசித்து வந்தார்.
கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவே, அவர் வீடு திரும்பினார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
சில நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மீண்டும் பாதிப்படைந்ததை அடுத்து, மீண்டும் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று காலமானார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், வானம் வசப்படும் என்ற நாவலுக்கு 1995 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும், புதுச்சேரி அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ள பிரபஞ்சனுக்கு புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன்பு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
அவர் எழுதிய நாவல்களில் வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும் போன்ற நாவல்களும், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், நேற்று மனிதர்கள் ஆகிய சிறுகதை தொகுதிகள் புகழ் பெற்றவை.
அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.