திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் கூடியது.
மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் கூடியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.
மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் இணைந்து நடைபெறும் என திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் மட்டும் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதனால், மக்களவைத் தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது.
ஏற்கனவே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் தொகுதிகளின் கள நிலவரங்களை அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள்,பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்று, அவர்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி, மக்களவைத் தேர்தலின்போது திமுக முன்னெடுக்க வேண்டிய பணிகள், திமுகவுக்கு வலுவாக உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
கூட்டத்தில், இறுதியாக தேர்தலுக்குத் தயாராவது குறித்து நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை வழங்க உள்ளார்.
திமுகவில் புதிதாக சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.