ஜெயலலிதா மரணம்: பிப். 26-இல் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் வரும் 26-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என சசிகலா தரப்பு வழக்குரைஞர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் வரும் 26-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என சசிகலா தரப்பு வழக்குரைஞர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
சசிகலாவுக்கு அழைப்பாணை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ஆணையத்தில் ஆஜரான சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, சசிகலாவுக்கு எதிராக புகார், சாட்சியம் அளித்தவர்களின் விவரங்களையும், ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.
அதன்பின்பு சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த 22 பேரின் விவரங்களையும், அவர்களிடம்
குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்ததுடன், அதற்கு ஏதுவாக ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளை திங்கள்கிழமை வரை (பிப்.12) வரை ஒத்திவைத்து நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.
வரும் 26-இல் பிரமாணப் பத்திரம்: இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் திங்கள்கிழமை ஆஜரான சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 4 பேரின் 16 ஆவணங்கள் திங்கள்கிழமை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுமார் 450 ஆவணங்களை இரண்டு நாள்களில் தர உள்ளதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை பெற்றுக் கொண்ட பின் வரும் 26-ஆம் தேதி சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றார்.