பேரவையில் ஜெயலலிதா படம்: திமுக மனு இன்று விசாரணை
தமிழக பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை (பிப்.13) விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை (பிப்.13) விசாரணைக்கு வர உள்ளது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணை தொடங்கிய போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம்
குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நலத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என மனுதாரர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் அவசர அவசரமாக ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அகற்றக்கோரி மனுதாரர் ஜெ.அன்பழகன் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார். அப்போது வழக்குரைஞர் கே.பாலு, வழக்குரைஞர் எஸ்.துரைசாமி தரப்பிலும் ஜெயலலிதாவின் படத்திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டனர். இதனையடுத்து மனுவாகத் தாக்கல் செய்யுங்கள் என இருவரிடமும் தெரிவித்து, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.