ஒரு லட்சம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவையும், அரசையும் ஒன்று செய்துவிட முடியாது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 7.50 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். 2016-இல் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் தங்கத்துக்கு பதில் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன். அதிமுகவினரை ஊழல்வாதிகள் என்று கூறும் தினகரனுக்கு அடையாறில் ஒரு ஏக்கரில் பங்களா உள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டிற்கு முன் எங்கிருந்தார் என்று கூட தெரியாத தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு உள்ளது. ஒரு தினகரன் அல்ல, ஒரு லட்சம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவையும், அரசையும் ஒன்றும் செய்து விட முடியாது என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ
கே.பழனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை, 30 பேருக்கு மிதிவண்டி, 10 பேருக்கு தையல் இயந்திரம், 5 பேருக்கு சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமசந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து தொண்டனர்.