சென்னை: சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக நடிகை கவுதமி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதில் கூற விரும்பவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
துபையில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கமல் திங்களன்று மும்பை சென்றிருந்தார். ஆனால் அவரது உடல் கொண்டு வரப்படுவது தாமதமாவதால் அவர் செவ்வாய் மாலை சென்னை திரும்பினார். மும்பை இல்லத்தில் இருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியிடம் ஆறுதல் கூறியதாக தெரிவித்த அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
சம்பள பாக்கியிருப்பதாக கவுதமி தெரிவித்திருக்கிறார். அதனை கவனித்துக் கொள்வதற்கு என்று தயாரிப்பு அலுவலகத்தில் தகுந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஏதேனும் தொகை அவருக்கு நிலுவையிலிருந்தால் அளிக்கப்படும். அவர் பிரிந்து போனதற்காக தற்பொழுது வருத்தம்தான் படலாம். அவர் கூறியுள்ளது பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்துக் கூற விரும்பவில்லை.
விழுப்புரத்தில் சிறுவன் கொலை மற்றும் சிறுமி வன்புணர்வு விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்டிகரில் தமிழக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதுதான் என் கருத்து. வட நாடு மாணவர்கள் இங்கு வந்து பத்திரமாக கல்வி பயின்று திரும்புகிறார்கள். அதேபோன்று நாட்டில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும் எங்கு சென்று கல்வி பயின்றாலும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.