தொடர்ந்து யோகா செய்து சென்னையைச் சேர்ந்த பெண் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் கவிதா பரணிதரன் (வயது 31). மூன்றரை வயது குழந்தைக்கு தாயான இவர் தற்போது யோகா செய்வதில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
டிசம்பர் 23-ந் தேதி காலை 7 மணியளவில் இவருடைய மாரத்தான் யோகா முயற்சி தொடங்கியது. இதன்மூலம் 5-ஆம் நாளான டிசம்பர் 28-ந் தேதி பிற்பகல் 02:02 மணியளவில் இவர் முந்தைய மாரத்தான் யோகா கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மாரத்தான் யோகாவில் ஈடுபட்ட கவிதா, டிசம்பர் 30-ந் தேதி வரை இந்த சாதனை முயற்சியை நீட்டித்தார்.
அவ்வகையில், உலகளவில் நீண்ட நேரம் மாரத்தான் யோகா முயற்சியில் ஈடுபட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
முன்னதாக, நாசிக்கைச் சேர்ந்த பிரதன்யா பாட்டீல், இதே வருடம் ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிய மொத்தம் 103 மணிநேரங்கள் தொடர்ந்து மாரத்தான் யோகா செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்திருந்தார்.
இதுகுறித்து கவிதா பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஒரு நாள் மட்டும் படித்துவிட்டு தேர்வு எழுதுவது சற்று கடினம். ஆனால் தொடர்ந்து அன்றைய பாடங்களை படித்து வந்தால் மிகச்சுலபமாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். அதுபோல தான் எனது சாதனையும். இதற்காக நான் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக யோகா பயின்று வருகிறேன். இதற்காக எனக்கு ஒத்துழைப்பு அளித்து உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், கணவர், கணவரின் பெற்றோர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கவிதாவின் தாயாரும், யோகா நிபுணருமான ஜமுனா மோகன் இதுகுறித்து கூறியதாவது:
கவிதானவின் இந்த சாதனைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்காக அவர் கடுமையாகப் பயிற்சி செய்தார். தொடர்ந்து உழைத்தார். தற்போது வெற்றியடைந்துள்ளார். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.