காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தூரப்பன்நாயக்கர்பட்டியில் ராணுவ மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
எட்டயபுரம் அருகே சாத்தூரப்பன்நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜேஷ் கண்ணன் (35). ராணுவ வீரரான இவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பந்திப்போரா மாவட்டத்தில் மலைப்பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். அவர்
கடந்த 28ஆம் தேதி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினார் . அரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ஆனந்த லட்சுமிக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பின்னர் ராஜேஷ் கண்ணனின் உடல் தில்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சாத்தூரப்பன்நாயக்கப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்குள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.
இதில், தில்லி மற்றும் திருவனந்தபுரம் ராணுவ முகாம்களைச் சேர்ந்த சுபேதார்கள் சீனிவாசன், ரமேஷ் தலைமையில் 15 ராணுவ வீரர்கள், மாவட்ட என்.சி.சி. அலுவலர் லெப்டினென்ட் கர்னல் வெற்றிவேல், எட்டயபுரம் வட்டாட்சியர் சூர்யகலா, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்டயபுரம் சீனிவாசன், மேலநம்பிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் தனவதி, மதிமுக விவசாய அணி மாநில துணைச் செயலர் அ. வரதராஜன், முன்னாள் ரானுவ வீரர்கள் நலச்சங்கத் தலைவர் கேசவன் மற்றும் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.