புதுச்சேரியில் தமிழ்ப் பண்பாட்டின் மீதான காதலால் பிரான்ஸ் நாட்டின் காதல் ஜோடி தமிழர் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
புதுவை மாநிலத்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மறைந்துவிட்டாலும், அதன் கலாசாரம் தொடரத்தான் செய்கிறது. இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து விடுமுறைக் காலங்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அந்த வகையில், தமிழரின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் உணவு, உடை உள்ளிட்ட விஷயங்கள் அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழர்களின் அனைத்துப் பண்டிகைகளிலும் பிரான்ஸ் நாட்டினர் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.
இந்த நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் காண பிரான்ஸ் நாட்டினர் அதிக அளவில் புதுச்சேரிக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் டேவிட் (45), கரோலின் (40) ஆகிய இருவரும் தமிழர் பண்பாட்டால் ஈர்க்கப்பட்டு, தமிழர் முறைப்படி கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, வியாழக்கிழமை காலை புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் தமிழர் முறைப்படி மணப்பந்தல் அமைத்து, ஐதீக முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
மணமகன் டேவிட் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்தும், மணமகள் பட்டுப் புடவை அணிந்தும் மணப்பந்தலில் அமர்ந்திருந்தனர்.
இந்தத் திருமண நிகழ்வில் காதல் ஜோடியின் உறவினர்கள், பிரான்ஸ் நாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அட்சதைத் தூவி மணமக்களை வாழ்த்தினர்.