ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: சங்கத் தலைவர் அப்சல் தகவல்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று சங்கத் தலைவர் அப்சல் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் பிற அண்டை மாநிலங்களின் பேருந்து கட்டணத்தைவிட பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாதாரண புறநகர் பேருந்தின் புதிய கட்டணம், கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் கட்டணத்தை விட குறைவானதாகும்.
மேலும், அக்கட்டணங்களை அம்மாநில அரசுகள் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே உயர்த்திவிட்டன. மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் 20.1.2018 முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில், தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ள போதிலும், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது. ரெட் பஸ் போன்ற ஆப்ஸ்-களில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் விலைகளிலும் மாற்றமில்லை என்றார்.