முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: சசிகலாவை நேரில் சென்று விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி திட்டம்? 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை சிறையில் நேரில் சென்று விசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக.. 

Updated On : 25 ஜனவரி, 2018 at 2:12 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை சிறையில் நேரில் சென்று விசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளதாக பரவலாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. எனவே இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரித்து வருகிறது. வியாழன் அன்று கூட மருத்துவர் பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் சென்று விசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு முதலில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சார்பாக வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் அவர் தொடர்ந்த விசாரணையில், முதலில் ஆணையத்தில் அனைவரும் ஆஜராகி விளக்கமளிக்கட்டும். பின்பு அதில் சசிகலாவுக்கு எதிராக யார் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அதனை பின்னர் அதிலிருந்து 15 நாட்களில் அது பற்றி  உரிய விளக்கமளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வியாழன் அன்று ஆணையத்தில் செந்தூர் பாண்டியன் மீண்டும் ஆஜரானார். அப்பொழுது நீதிபதி ஆறுமுகசாமி இந்த விசாரணை தொடர்பாக ஏன் நான் நேரில் சென்று சசிகலாவை விசாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீங்கள் விரும்பினால் அவ்வாறு செய்யலாம் என்று வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். எனவே வரும் 30-ஆம் தேதி இது தொடர்பான உத்தரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.