அழகு நிலையங்கள் தொடங்க தடையின்மைச் சான்று அவசியம்: பேரவையில் மசோதா நிறைவேறியது
அழகு நிலையங்கள் தொடங்க காவல் அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையின் தடையின்மைச் சான்று கட்டாயம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அழகு நிலையங்கள் தொடங்க காவல் அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையின் தடையின்மைச் சான்று கட்டாயம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான எந்தவொரு இடத்திலும் விளம்பரப் பலகைகளை நிறுவ உரிமம் வழங்கலாம். மேலும், விளம்பரப் பலகைகளை நிறுவ உரிமக் கட்டணம் ரூ.10,000-த்தில் இருந்து ரூ.25,000-மாக உயர்த்தப்படுகிறது. மேலும், விளம்பரப் பலகைகள், மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை, விளம்பர அட்டைகளை நிறுவ வகுக்கப்பட்டுள்ள சட்ட வழிமுறைகளை மீறுவோர் மீதான தண்டனை உயர்த்தப்படும்.
அழகு நிலையங்கள், ஆரோக்கிய நீருற்று, மசாஜ் மையங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அத்தகைய நிலையங்கள், மசாஜ் மையங்களைத் தொடங்க காவல் அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ் இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படாது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.