மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் ஆய்வு
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை திருவனந்தபுரம், சென்னையைச் சேர்ந்த மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் (எச்.எல்.எல்) திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை திருவனந்தபுரம், சென்னையைச் சேர்ந்த மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் (எச்.எல்.எல்) திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு திருவனந்தபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய கட்டுமான குழுவினர் மருத்துவமனை அமைய உள்ள நிலப்பரப்பை முழுவதுமாக சுற்றிப்பார்த்தனர்.
அப்போது, கட்டடம் அமையவுள்ள மண்ணின் தன்மை, நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு, குடிநீர் வசதி, மின்சாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகள் குறித்தும் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை முதன்மையர் மருதுபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் இங்குள்ள வசதிகள் குறித்தும், மண்ணின் தன்மை குறித்தும் 3 நாள்களில் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதே நிறுவனம்தான் மதுரையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர் என்றார்.
ஆய்வின்போது, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், வட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித் துறை உதவி நிர்வாகப் பொறியாளர் செல்வராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.