18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்: டி.டி.வி.தினகரன்
18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொங்கு மண்டல மாநாடு மற்றும் நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் ஆதரவில் முதல்வராகப் பதவிக்கு வந்தவர். தற்போது, தில்லிக்குப் பயந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். கட்சி, சின்னம், ஆட்சி அதிகாரம் இருந்தும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
தேர்தலில் ஜெயலலிதாவை வெல்ல முடியாதவர்களுடன் இணைந்து கொண்டு துரோகம் செய்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்காத காரணத்தால்தான் சசிகலாவும், நானும் சிறைத் தண்டனைகள் அனுபவித்தோம்.
தமிழகத்தில் தற்போது முட்டை முறைகேடு தொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல பல முறைகேடுகள் தொடர்பாக சோதனைகள் தொடரும். இந்த சோதனைகள் மூலம் உண்மைகள் வெளிவரும்.
தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம். மேலும், 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் மாதம் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறும். இரட்டை இலைச் சின்னம், கட்சி ஆகியவற்றை பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவுடன் கைப்பற்றுவோம் என்றார்.