அரசு விரைவுப் பேருந்துகளில் விரைவில் அறிமுகமாகிறது தட்கல் வசதி
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் விரைவில் தட்கல் ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் விரைவில் தட்கல் ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள், ஏசி வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், கிளாசிக் அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் விரைவுப் பேருந்துகளில் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்யும் முறையை பண்டிகைக் காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பேருந்திலும் 4 படுக்கைகள், தட்கல் ஒதுக்கீடுக்காக ஒதுக்கப்படும் என்றும், இதற்கு வழக்கமான கட்டணத்தை விட 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Advertisement
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு 5 மாதங்களுக்கு முன்பு அளித்த பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. மேலும், தேவைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களை மாற்றியமைப்பது குறித்தும் பரிந்துரை அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் 8 போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 19,490 (மாற்று பேருந்துகள் அல்லாமல்) இயக்கப்படுகின்றன. இதில் 6,500 புறநகர்ப் பேருந்துகளும், 1,060 விரைவுப் பேருந்துகளும் அடங்கும்,
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக 515 பேருந்துகள் இணைக்கப்பட்டன. இன்னும் 300 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளது. இவை ஜூலை இறுதியில் சாலையில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.