திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பழைமையான வெண்கலச் சிலை, சூலம் திருடு போனது குறித்து நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம், பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி, கடந்த 1956-ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றேகால் அடி உயர ஸ்ரீதண்டாயுதபாணி சிலை, சூலம் ஆகியவற்றை கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.
கடந்த 1959-ஆம் ஆண்டு கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் கணக்கெடுக்கப்பட்டபோது, தண்டாயுதபாணி சிலையும், சூலமும் இருந்ததாம். இந்த நிலையில், அண்மையில் கோயில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்ற ஞானசேகர் சிலைகளின் விவரங்களை ஆய்வு செய்தபோது, ஆவணங்களின்படி இருக்க வேண்டிய வெண்கலத்தால் செய்யப்பட்ட ஸ்ரீதண்டாயுதபாணி சிலையும், சூலமும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்குமாறு திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி புதன்கிழமை உத்தரவிட்டார்.