தனது யோகா வாத்தியாருக்கு கருணாநிதி வைத்த 'செக்' தெரியுமா?
தனக்கு யோகா கற்றுக் கொடுத்த பிரபல யோகா குரு கூறிய பயிற்சி வழிமுறை ஒன்றுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
சென்னை: தனக்கு யோகா கற்றுக் கொடுத்த பிரபல யோகா குரு கூறிய பயிற்சி வழிமுறை ஒன்றுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
தனது அரசியல் ஆசான்களான பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகிய இருவர் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் கருணாநிதி. அவர்கள் வழியில் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பவர்.
அதேபோல உடலநலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒருவர். உடல்நலம் ஒத்துழைத்த வரையில் அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் போகும் பழக்கம் நின்றுவிட்டது!
அதற்குப் பதிலாக யோகா செய்ய அறிவுறுத்தப்பட்டனர். கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் பிரபல யோகா குருவான டி.கே.வி.தேசிகாச்சார். யோகா பயிற்சியின் பொழுது `நாராயண நமஹ’ என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் அதற்குப் பதிலாக `ஞாயிறு போற்றுதும்’ என்றுதான் கூறுவேன் என்று கருணாநிதி தெரிவித்து விட்டார்.
இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான் என்று கூறி கருணாநிதி அவ்வாறே கூற தேசிகாச்சாரும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.