பழங்குடியினருக்கான ஜாதிச் சான்றிதழ் விவகாரம்: இயக்குநருக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, ஆதிதிராவிடர், பழங்குடியினர்
தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும், அவர்களுக்கு இதுவரை ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் பழங்குடியின மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஜாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாமாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக 5 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.