முகப்பு
தமிழ்நாடு

பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் : நடிகர் விவேக் வேண்டுகோள்

சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
உதகை  ஸ்டீபன் ஆலய வளாகத்தில் மரக் கன்றுகளை நடும் நடிகர் விவேக். உடன், மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  உள்ளிட்டோர்.
பகிர்:

சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத் துறை ஆகியன சார்பில் உதகையிலுள்ள ஸ்டீபன் ஆலய வளாகத்தில் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் கலந்துகொண்டு மர கன்றுகளை நட்டார். 
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றி மக்களிடையே சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரும்பாலும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. 
ஆனால், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க மறந்துவிடுவதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுலாத் தலங்கள் மாசுபடும் என்பதை சுற்றுலாப் பயணிகள் உணர வேண்டும். எனவே, நீலகிரியைக் காக்கும் வண்ணம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். 
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள், தன்னார்வத் தொண்டு அமைப்பினரை சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி ஏற்கவைத்தார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா, மாவட்ட வன அலுவலர், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் விடுதி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து 
கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →