முகப்பு
தமிழ்நாடு

தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரின் சமயோஜிதம்

உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளியின் உயிரை அந்த வழியாகச் சென்ற மருத்துவரின் சமயோஜிதம் காப்பாற்றியது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளியின் உயிரை அந்த வழியாகச் சென்ற மருத்துவரின் சமயோஜிதம் காப்பாற்றியது.
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனோகரன் (46). இவர் போரூர் மேம்பாலத்தில் சாரத்தில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தார். உடன் பணியாற்றியவர்கள் அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது. 
அந்தச் சமயம் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இதயவியல் நிபுணராகப் பணியாற்றும் எஸ்.நாகேந்திர பூபதி பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் காரிலிருந்து இறங்கி சென்று பார்த்தார். அப்போது மயங்கிக் கிடந்த மனோகரனைப் பார்த்தும் அவரைப் பரிசோதித்தார். அவருக்கு மூச்சும் இல்லை, நாடித் துடிப்பும் இல்லை. இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளித்தார். அப்போது அந்த இடத்திலேயே மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவரும் இருந்தார்.
அந்த மாணவரை மனோகரனின் நெஞ்சுப் பகுதியை தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கச் சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்தார் டாக்டர் நாகரேந்திர பூபதி. 
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததும் அதில் உள்ள தானியங்கி அதிர்வு கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, சுவாசிக்க ஆக்சிஜன் கருவியும் பொருத்தப்பட்டது. 
மருத்துவமனைக்குச் சென்றதும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 
தற்போது ஆபத்து நீங்கி சுய நினைவுக்கு வந்துவிட்டார். அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →