மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு ஐந்து நிபந்தனைகள் விதித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி புதனன்று அறிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுதான் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு ஐந்து நிபந்தனைகள் விதித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது புதனன்று முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் பொழுது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் கதிர்வேல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, மத்திய அரசு ஐந்து நிபந்தனைகள் விதித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் அவர் கூறியதாவது:
இந்த ஐந்து நிபந்தனைகள் தொடர்பான கடிதமானது தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளாவன:
மருத்துவமனைக்கு 20 மெகாவாட் மின்சார இணைப்பு வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.
சரியான குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மருத்துவமனை அமையவுள்ள இடமானது தேசிய நெடுஞசாலையுடன் இணைக்கப்பட வேண்டும்.
அங்கு அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த கோபுரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
வழியில் பைப்லைன்கள் உள்ளதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் கதிர்வேல் தெரிவித்தார்.