முகப்பு
தமிழ்நாடு

சென்னை மண்டலம்: ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள்

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் பணியாற்றும் சுமார் 630 தண்டவாள பராமரிப்பு தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வரும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

Updated On : 27 ஜூன், 2018 at 11:28 AM
பகிர்:


சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் பணியாற்றும் சுமார் 630 தண்டவாள பராமரிப்பு தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வரும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

ரயில்வே தண்டவாளப் பராமரிப்பாளர்கள், வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது, ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது தொடர்பான தகவல் தெற்கு ரயில்வேக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தண்டவாளப் பராமரிப்பாளர்களை உடனடியாக பணிக்குத் திரும்பி தங்களது மேலாளர்களிடம் தகவல் அளிக்குமாறு சென்னை மண்டலத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, சுமார் 630 தண்டவாளப் பராமரிப்பாளர்கள் வேறு பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

தண்டவாளப் பராமரிப்புத் தொழிலாளர்கள் பலரும், தங்களது பணிகளை செய்யாமல், ரயில்வே உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகள் செய்யவும், சில அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் பணியமர்த்தப்படுகின்றனர்.

இதனால் தண்டவாளப் பராமரிப்புப் பணி சரிவர செய்யப்படாமல், ரயில்கள் தாமதமாக செல்வது போன்றவை ஏற்படுகின்றன.

இந்த தண்டவாளப் பராமரிப்பாளர்கள் தினந்தோறும் 6 கிலோ மீட்டர் தூர தண்டவாளங்களை பரிசோதனை செய்து அதில் ஏதேனும் சிறிய பிரச்னை இருந்தாலும் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுத்தியல், இடுக்கிப் போன்ற மிகக் கணமான அதாவது 16 கிலோ எடையுள்ள கருவிகளை சுமந்து கொண்டு 3 கிலோ மீட்டர் தூரம் ஒரு தண்டவாளப் பகுதியில் நடந்து சென்று, அதே தண்டவாளத்தில் அடுத்த வழித்தடத்தில் திரும்பி வந்து அவர்கள் மொத்தம் 6 கி.மீ. தூரத்தை தினந்தோறும் சோதனை செய்ய வேண்டும் என்பது வழக்கம். தண்டவாளங்கள் சரியாக இருக்கிறதா, க்ரீஸ் போடப்பட்டுள்ளதா? என்பதையும் இவர்கள் சோதிக்க வேண்டும்.

ஆனால், தண்டவாளப் பராமரிப்புப் பணியை செய்யாமல், வேறு வேலைகளுக்கு இவர்கள் பணியமர்த்தப்படுவதால் இதுபோன்ற சோதனை மற்றும் சரி செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது.

இது குறித்த சென்னை மண்டலம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், மோசமான உடல்நிலை மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக மட்டுமே சில தண்டவாளப் பராமரிப்புத் தொழிலாளர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், சென்னை மண்டல ரயில்வே மேலாளர் நவீன் குலாதி கூறுகையில், தண்டவாளப் பராமரிப்புத் தொழிலாளர்கள் யாரும் ரயில்வே அதிகாரிகளின் வீடுகளிலோ அல்லது வேறு பணிகளுக்கோ அமர்த்தப்படுவதில்லை. ஒரு வேளை சங்கப் பணிகளுக்காக யாரேனும் பணியமர்த்தப்பட்டிருந்தால் நிச்சயம் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.