தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்: 32 இடங்களுக்கு அனுமதி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டிலேயே 32 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி 2000-ஆம் ஆண்டில் 100 இடங்களுடன் தொடங்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளில் 1,400 பேர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளனர். இந்தக் கல்லூரியில் இதுவரை முதுநிலை மருத்துவ இடங்கள் இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில் மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றின் அடிப்படையில், 32 புதிய முதுநிலை இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, பொது மருத்துவத் துறையில் 10 இடங்கள், பொது அறுவைச் சிகிச்சைத் துறையில் 10 இடங்கள், குழந்தைகள் நலத்துறையில் 6 இடங்கள், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறையில் 6 இடங்கள் என மொத்தம் 32 இடங்கள் கிடைத்துள்ளன.
நிகழ்கல்வியாண்டில் நடைபெறும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது இந்த இடங்களும் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.