சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, கல்லூரியை ஓரிரு நாள்களில் திறக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பாரிமுனையில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செயவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே, சட்டக் கல்வி இயக்குநருடன் ஆலோசனை மேற்கொண்டு, ஓரிரு நாள்களில் வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.