ஏப்ரல் 1ம் தேதி துபை செல்லவிருந்த திவ்யா: விதி எங்களை முட்டாளாக்கிவிட்டதே என கண்ணீர் விடும் தாய்
ஏப்ரல் 1ம் தேதி கணவர் விவேக்குடன் துபை செல்லவிருந்த திவ்யா காட்டுத் தீயில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை: ஏப்ரல் 1ம் தேதி கணவர் விவேக்குடன் துபை செல்லவிருந்த திவ்யா காட்டுத் தீயில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேராசிரியராக பணியாற்றி வந்த திவ்யாவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்தது.
காட்டுத் தீயில் சிக்கி அவரது காதல் கணவர் விவேக் சம்பவ இடத்தில் பலியாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
Advertisement
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த போது கூட தவமணி கலங்கவில்லை. ஆனால் 90 சதவீத தீக்காயத்துடன் 25 வயதாகும் மகள் திவ்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கலங்கிவிட்டார். தனது மகள் படும் கஷ்டத்தைப் பார்த்து தாங்க முடியாமல், அவருக்கு அளிக்கப்பட்ட உயிர் காக்கும் கருவிகளையே அகற்றிவிடுமாறு கதறியிருக்கிறார் தவமணி.
ஒரே பகுதியைச் சேர்ந்த திவ்யா - விவேக் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இவர்களுக்கு இடையே காதல் மலர, முதலில் எதிர்த்த பெற்றோர் பிறகு சம்மதித்து காதலர்களை தம்பதிகளாக்கினர். விவேக் துபையில் பணியாற்றி வந்தார். இவர்களது காதல் திருமணம் ஒரு சில மாதங்கள் கூட நீடிக்காமல் இப்படி காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது பெற்றோருக்கு மிகப்பெரிய பேரிடியாக உள்ளது.
"மரணத்தின் இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடும் எனது மகள் படும் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. அவளை இறக்க விடுவதே சரி என்று தோன்றியது. அவளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கூறினேன்" என்றார் தாய் தவமணி கண்ணீருடன்.
எம்.எஸ்சி., எம்.பில்., படித்து முடித்து தான் பயின்றித கல்லூரியிலேயே பேராசிரியராக பணியாற்றிய திவ்யாவின் உடல் மதுரை மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி திவ்யா, தனது கணவர் விவேக்குடன் துபை செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயாராக உள்ளன. ஆனால் விதி எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டது என்கிறார்கள் உறவினர்கள்.