ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பாஜக, தெலுங்கு தேசம் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசமும், ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜகவும் விலகின.
இதையடுத்து, பாஜக மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திர எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தது. இதை தெலுங்கு தேசம் கட்சி ஆதரித்தது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது முதலே பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. அங்கு இதுபோன்ற பிரச்னைகள் இதுநாள் வரை இருப்பது தெரியாதா?இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரலெழுப்பாமல் தெலுங்கு தேசம் கட்சி ஏன் இத்தனை நாட்களாக மௌனம் சாதித்து. இது முழுக்க - முழுக்க சந்தர்பவாத அரசியல் என்றார்.