தொடர் விடுமுறை: மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க உத்தரவு
தொடர் விடுமுறை தினங்கள் வரும்போதிலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்களை கல்லூரிகளில் அனுமதிக்க
தொடர் விடுமுறை தினங்கள் வரும்போதிலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்களை கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முதுநிலை மருத்துவப் படிப்பில் முதல்கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் உடனடியாக குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாணவர் சேர்க்கை கவுன்ட்டர்களை திறந்து வைக்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடமிருந்து பரிவர்த்தனை கட்டணமாக ஆண்டுக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அல்லது ரூ.75 ஆயிரம், இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனை மட்டுமே முதல்கட்டமாக வசூலிக்க வேண்டும். தொடர் விடுமுறையின் காரணமாக வங்கிகளில் வரைவோலை எடுக்க முடியாத மாணவர்களிடமிருந்து முன் தேதியிட்ட காசோலைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களை கல்லூரியில் அனுமதிக்கலாம். மேலும் கட்டண விவரம், படிப்பை முடித்த பின்பு பணியாற்றும் சேவைக் காலம் (பாண்ட்) தொடர்பான சந்தேகங்களை சேர்க்கையின் முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு மாணவர்கள் தெளிவு பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.
முதல்கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு ஆணையைப் பெற்று, அடுத்தகட்ட கலந்தாய்வில் பங்கேற்று வேறு கல்லூரிகளைத் தெரிவு செய்ய விரும்பும் மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்கள் செலுத்திய கட்டணத்தை மருத்துவக் கல்லூரிகள் உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.