தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனை அவசியம்: மத்திய தொழிலாளர் நலத் துறை செயலர்
தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல் நலனைக் காக்க சுற்றுச்சூழல் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது அவசியம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்
தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல் நலனைக் காக்க சுற்றுச்சூழல் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது அவசியம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நலத் துறைச் செயலர் எஸ்.சத்யவதி கூறினார்.
தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவன இயக்ககம் ஆகியவை இணைந்து பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் குறித்த ஒருநாள் கருத்தரங்கை நடத்தின.
தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நலத் துறைச் செயலர் எஸ்.சத்யவதி பேசியது:-
''கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்தச் சட்டம் குறித்து ஆலோசனை நடத்துவது மிகவும் அவசியம். சட்டம் குறித்த வரைவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வரவேற்கப்படுகின்றன.
பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நமது நாடு முன்னேறும். எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் நமக்கான பாதுகாப்பை நாமே உறுதி செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை அதிக அளவில் குறைக்க முடியும்'' என்றார் சத்யவதி.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இயக்குநர் எஸ்.கண்மணி, மும்பையைச் சேர்ந்த இயக்ககத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் ஆர்.கே.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.