காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜெயகுமார்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்க்கமாகவே உள்ளது. இருந்தபோதும் 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு 3 மாத கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதை தமிழக அரசு கடுமையான எதிர்க்கும்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மட்டும் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் மத்திய அமைச்சரவை செயலர், நீர்வளத்துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
தமிழக விவசாயிகள் உணர்வுப்பூர்வமாக போராடி வருவது மத்திய அரசுக்கு தெரியவில்லையா? கர்நாடக மக்களின் உணர்வை பார்க்கும் மத்திய அரசுக்கு தமிழக மக்களின் உணர்வு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.