காவிரி விவகாரத்தில் மே 16-இல் நல்ல தீர்ப்பு வரும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் வரும் 16-ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக முதல்வர் எடப்பாடி
சேலம்: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் வரும் 16-ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான, வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்ய கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். வழக்கு சுமார் பதினோறு மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீலிடப்பட்ட கவரில், காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
Advertisement
மேலும், தீர்ப்பை செயல்படுத்தி நதி நீர் பங்கீட்டை உறுதி செய்ய காவிரி ஆணையம், வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் வரும் புதனிகிழமை (மே 16) நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியமும், நீர்பங்கீடு குழுவும் அமைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என தெரிவித்தார்.
எது எப்படியோ, கர்நாடக பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து தனது திட்டமிட்ட செயலை நிறைவேற்றி உள்ளது.