முகப்பு
தமிழ்நாடு

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியமா?

கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியமா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 1:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியமா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்க கோதாவரி -காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என, சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் பேசியிருக்கிறார். 
கோதாவரி - காவிரி இணைப்பது பற்றி 1970 -களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்னையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஏமாற்றி வரும் நிலையில், கொந்தளித்துள்ள தமிழக மக்களையும், விவசாயிகளையும் சமாதானம் செய்வதற்காகத்தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது. கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டம் ஐந்து மாநிலங்கள் தொடர்புடையது. கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா? 
குறுவைப் பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் என்று அன்புமணி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.