வள்ளலார் குறித்து அவதூறு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சமூக வலைதளங்களில் வள்ளலார் குறித்து அவதூறு பரப்பி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் மனு
சமூக வலைதளங்களில் வள்ளலார் குறித்து அவதூறு பரப்பி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட அனைத்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்பாபு தலைமையிலான நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளல் பெருமானையும், அவர் தோற்றுவித்த சன்மார்க்கக் கொள்கைகளையும் தவறான கோணத்தில் அணுகி, சமூக வலைத்தளங்களில் சிவயோகி (எ) சிவக்குமார் யோககுடில் என்ற அமைப்பு மூலம் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். வள்ளல் பெருமானின் வாழ்வியல், அருளியல் ஆகியவற்றை இழிவு செய்தும், கோடிக்கணக்கான சன்மார்க்க அன்பர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலும் அவர் செயல்பட்டு வருகிறார்.
எனவே, அவதூறு பரப்புரைகளை வெளியிட்டு வரும் சிவயோகி (எ) சிவக்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.