முகப்பு
தமிழ்நாடு

இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு: பாலகுமாரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் 

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

சென்னை: எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) செவ்வாய் மதியம் சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகுமாரன் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது  அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செவ்வாய் மதியம் காலமானார்.

இந்நிலையில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடரபாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கி, சிறந்த எழுத்தாளராக விளங்கிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திரு. பாலகுமாரன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். தமிழக அரசின் திரு.வி.க. விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு ஆகும். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.