எரிபொருள் மீதான வரியை குறைக்கும் நோக்கமில்லை: டி.ஜெயக்குமார்
எரிபொருள் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு, வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை விதிக்கிறது. இந்த வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதி எரிபொருள் மீதான வாட் வரியிலிருந்தே கிடைக்கிறது. மேலும், டாஸ்மாக் மூலமும் வருவாய் கிடைக்கிறது. பல்வேறு துறைகளின்கீழ் ரூ.77 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கும் நோக்கம் இல்லை என்றார் அவர்.