குடிமைப் பணிகள் தேர்வில் புதிய விதிமுறை: வாசன் கண்டனம்
குடிமைப் பணிகள் தேர்வில் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பணிகள் தேர்வில் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அகில இந்திய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வு முறையில் புதிய விதிமுறையைத் திணிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விலும் தேர்ச்சி பெறுவோர் இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு செல்வர். நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும், முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்துக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் முதன்மை தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெறுவோர் முசோரியில் 3 மாதம் பயிற்சி பெற வேண்டும். ஆனால், அந்தப் பயிற்சியின்போது பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற புதிய விதிமுறை ஏற்புடையதல்ல.
இந்தப் புதிய விதிமுறையால் பலவகையில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குடிமைப் பணிகள் தேர்வில் ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.